Sunday, August 28, 2022

வாசகம், திருவாசகம் 

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே

–குழைத்தபத்து, திருவாசகம்


வேண்டுதல் என்பது என்ன? 

மனம் விரும்புவதைக் கேட்பது. மனம் எதை விரும்பும்? தான் அதுவரை பார்த்த கேட்ட விஷயங்களை. அவற்றைத்தாண்டி மனதால் சிந்திக்க முடியாது. புத்தி, அறிவைத்தேடும். அறிய முற்படும். மனதில் இதுவரை எவையெல்லாம் இல்லையோ அவற்றைத் தேடி அறிய முற்படும். அறிந்ததை மனதிடம் தரும். மனம் புதிதாக அறிந்த விஷயங்களை அனுபவிக்க ஆசைப்படும்.

இப்படியா நடக்கிறது ஆசைப் படுதல்?

ஆம். உதாரணம் பார்க்கலாமா? தோசை வேண்டும் என்பது ஆசை. ஆப்ரிக்கக் காட்டில் வாழும் ஒரு ஆதிவாசிக்கு அது ஆசையாக இருக்க முடியுமா? இல்லையே! ஏன்? அவன் அறியமாட்டான் அதைப்பற்றி. அறிவைப் பெற்றபின், அது மனதில் பதியும். அதன் பின் தானே ஆசை உண்டாகும்? இந்தக் கோவில் போனேன். ஸ்வாமியின் அலங்காரம் இப்படி இருந்தது என்று யாராவது போய்விட்டு வந்து சொன்னால், நமக்கும் அந்த க்ஷேத்ரம் போக ஆசை வருகிறது இல்லையா? 

இதில் இன்னொன்று. ஆசைப்படும் பொருள் எப்போதும் அதன் இயல்பிலேயே இருக்கிறது. நம்மை வந்து தூண்டுகிறதா? இல்லை. நம் மனம்தான் தூண்டிக்கொள்கிறது. எதனால்? மனதின் ஸ்வபாவத்தால். ஒரு கட்டிடம் இருக்கிறது. இயல்பின்படி, அது நகராது. நம் முன்னால் வந்து "என்னை வாங்கு" என்று சொல்லாது. அதே போல் தான் நகை, ஆடை அனைத்தும். அவ்வளவு ஏன்? நுரை ததும்ப முதல் டிகாக்ஷன் காபி மேஜை மேல் இருந்து, நம் வாய்க்குத் தானாகவா வருகிறது? பின் மனம் எப்படி அதை அடையும் ஆசையைக் கொள்கிறது?

மனம் வேறு எங்கோ அறிந்திருக்கிறது, அந்த பொருளின் உடைமை கொடுக்கும் பலன்களை. பலன் என்றால், அந்தப்பொருட்களை சொந்தமாக வைத்திருப்பதால் கிடைக்கும் பெருமை, புகழ், செல்வ வளம், அந்தச் செல்வங்களால் பெறக்கூடிய பலன்கள், சந்தோஷங்கள் இவற்றையெல்லாம் அறிந்த மனம், ஆசைப்படுகிறது. சாப்பாட்டு விஷயம் என்றால், சுவையின் இன்பம் அறிந்து ஆசைப்படுகிறது.

அதுவே தன்வரையில் ஆசையாகவும், இறைவனிடத்தில் வேண்டுதலாகவும் ஆகிறது.


நான் எதை வேண்டுவது நல்லது என்பதை அறிந்தவன் நீ என்கிறார் மாணிக்கவாசகர். பூரண சரணாகதியில். இறைவன் தன்னை ஆட்கொண்டபின், தனக்கென்று தனியாக ஒரு செயற்பட்டியல் இல்லை பக்தனுக்கு. இது இறைவன் விஷயத்தில் மட்டுமா? இன்றியய நவீன உலகில், வேலை கொடுத்தவரிடம் கூட இந்த பண்பு வெளிப்படுத்தப்படுகிறது.  அழிந்துபோகும் மனித உறவுகளிடையே இப்படி ஒரு மனோபாவம் இருக்கலாம் என்றல, அழியா பரம்பொருளின் இடத்தில் இருத்தல் நல்லதே.

அப்படி அவன் அறிந்து, அதையே என் புத்தியில் உரைப்பித்து, அதையே நானும் கேட்டதால், வேண்டியதனைத்தும் தருபவனாகவே மாறுகிறான் இறைவன்.

அவனை ஸ்தூலமாக அறிய முற்பட்டால் அரியவன். ஆம். அடி முடி காணப் புறப்பட்ட அயனுக்கும் மாலுக்கும் காணுதற்கு அரியவன். அந்தர்முக ஸமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா என்று அம்பாளைச் சொல்கிறோமே. உள்ளே காண வேண்டியதை வெளியே காண முற்படுதல் அறிவிலித்தனம் இல்லையா? அப்படி நாம் முயன்றால், தன்னைக் காட்டாது இருப்பதால், அரியவர் அவர். அறிதற்கு அரிது. அது பழச்சுவையென, அறிதற்கு அரிதென அமுதென அமரரும் அரியார் என்றாரே!

வேண்டி, நீ யாது அருள் செய்தாய்! என்று வியக்கிறார். யாது அருள்? ஆட்கொண்ட அருள் தான். "யானேயோ தவம் செய்தேன்? சிவாய நமவெனப்பெற்றேன்! தானாய் வந்து தயை செய்து எனை ஆட்கொண்டான்" என்று சொன்னவரும் இவர் தான். தவம் செய்தேன். அருள் செய்தான். அருள் செய்தான் தவம் செய்தேன் என்றார். அவன் அருளால் மட்டுமே அவன் தாள் வணங்க முடியும் என்பதை இதைவிட எப்படிச் சொல்ல? இங்கு வேண்டி என்பது, அவனுக்கு வேண்டு நமக்கு அருள் புரிந்தான் என்பது. அம்மாவுக்குக் குழந்தையின் அருகாமை ஒரு இன்பம் தானே. அதுபோல, எஹன்னை நன்றாக உணர்ந்த பிள்ளையை அருகிருத்த வேண்டி, யாது செய்தார்?

தன்னை அறிவித்தார். பக்தனுக்கு, குருவாக வந்து குருந்தமரத்தடியில் தன்னை அறிவித்து, தானறப்பெறச்செய்தார். சரி. அது என்ன பெரிய விஷயம்? தன்னைப்பற்றிச் சொல்வது? விஷயமே அதுதான். நான் விரும்பியதும் அதுவே தானே. நான் இப்போது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் சாப்பிட ஆசைப்பட்டு, வெளியில் போக முடியாமல், வீட்டுக்குள் இருக்க, என்னைத் தேடி வரும் விருந்தினர் கையில் அதே பொருள் எனக்கான பரிசாக இருந்தால்? அது தானே நான் வேண்டியிருந்ததை நான் வேண்டாமலேயே, எனக்குத்தருவது? உதாரணம் புரிதலுக்கு மட்டுமே. 

ஜீவன் தன்னை அறிவதன் நோக்கமே பிறப்பு. அதை ஜீவன் விரும்புதலும் உண்மை. அதையே குருவாக வந்து தன்னையும் அறிவித்து, தலைவனையும் அறிவித்து, பின்னர் அத்தலைவன் தானாய், பிறப்புத்தீர்த்தல் என்பதெல்லாம் என்ன வகை அருள்!! வரையறுக்க இயலாத தண்கருணை அல்லவா? அதுவே "யானும் அதுவே வேண்டின்" என்றார்.

"அல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்"..... அட, அப்படி, நீ நான் வேண்ட நினைத்ததைத் தருவது போக, நானும் வேறு ஏதாவது ஒன்றை விரும்பி வேண்டினால்? வேண்டினால் என்ன? வேண்டத்துண்டும் மனம் நிறைந்தவன் நீயேயாதலால், அந்த வேண்டுதலும் நீ என்ன வேண்டுகிறாயோ அதுவே தானே! உள்நிறைந்த ஞானக்கடலே!! உன்னையே சிந்தித்து, ஊறித்திளைத்துக்கொண்டு இருக்கும் எனக்கென்று தனியாக சிந்தையும் செயலும் அறப்பெற்றேனே !!! என்கிறாரே இதுவல்லவோ அனன்ய பக்தி!! அதுதன "ஆதுவும் உன்தன் விருப்பு அன்றே" என்றது.

ஆனன்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் (9.22)

வாசகம், திருவாசகம் தொடரும்....

No comments:

Post a Comment

  உங்களுக்கெல்லாம் திருமூலர் தெரியுமா? தெரிஞ்சா ஆறாவது பாராலேர்ந்து மட்டும் படிங்க. தமிழ்ல மூவாயிரம் பாட்டு எழுதினவர். அவர் கதை சில பேருக்கு...