Wednesday, August 31, 2022

வாசகம், திருவாசகம் --- திருச்சதகம்

100 பாடல்கள். அந்தாதி முறையில். மிக ஆழமான அற்புதமான கருத்துகள். மாணிக்கவாசகர் பாடல்கள் பற்றி,  நாம் சொல்ல வேண்டுமா? இருந்தாலும் சொல்கிறோம். நம் த்ருப்திக்காக. சிலவற்றைச் சிந்திக்க எண்ணியது மனம். 

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.

வாழ்க்கை நம்மை பல பொறுப்புகளை ஏற்கச்செய்கிறது. அவற்றில் எல்லாம் நாமும் புகுந்து புறப்பட்டு நம்மால் இயன்ற அளவுக்கு நல்ல குணங்களுடன் இருக்க முயன்றுகொண்டிருக்கின்றோம். மகளாக, மனைவியாக, தாயாக, தந்தையாக, மகனாக என்று ஏற்ற பாத்திரத்தில் சோபிக்க ஆனமட்டும் முயற்சி செய்கிறோம். அது நாடகத்தில் நடிகர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரம் போலத்தானே?

நம் வாழ்க்கையில் இறைவன் ஒரு சிறு பங்கு. மாணிக்கவாசகருக்கு. வாழ்க்கையே இறைவன் தான். அவர் சொல்கிறார், நான் நடிகன். நாடகத்தால் உன்னுடைய அடியார் போல நடித்தேன் என்று. எழுதி இயக்கும் இயக்குநர் அவர் தானே! ஸ்வாமியின் நாடகத்தில் நடிக்கிறோம் என்பது வேண்டுமானால் சரி என்று சொல்லலாம். உண்மையும் அதுவே. அந்த நாடகத்திற்கு கரு, நம் வினைப்பயன்கள். வினைகளின் வகைக்கு ஏற்ப கதபாத்திரங்களும், காட்சிகளும் அமைப்பவன் அவன். அந்த நாடகத்தால், நீ அமைத்துக்கொடுத்த இந்த வாழ்க்கையில், உனக்கு அடியார் வேடம் ஏற்றிருக்கிறேன் என்கிறாரோ! 

"வேடம் தானப்பா அடியார். ஆனால் நான் உண்மையான அன்பு வைக்கிறேனா? தெரியவில்லையே! என் பிறவிக்கே உரிய பற்றுகளுடன் தான் அலைந்து திரிந்து வருகிறேன். அதை நீயும் நன்கு அறிவாய்" என்கிறார்.

உண்மையில், தூய உணர்வு பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. ஜீவன் (உயிர்) தான் பிறந்து இளைக்கிறது, புல்லாகி, பூடாய் என்றெல்லாமுமாய். அந்த ஜீவன் இந்தப் பிறவியில் பக்தன் வேடம் போட்டிருக்கிறது என்கிறார். 

செய்வதோ வேடம், ஆனால் கேட்பதோ பெரிய பலன் என்கிறார். நாடக நடிகன் என்ன எதிர்பார்க்கலாம்? கைதட்டல்? சம்பளம்? அதற்கும் மேல், இன்னொரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு? இவர் சொல்கிறார், "நான் நடிக்கிறேன். வாஸ்தவம் தான். ஆனால் எனக்கு சம்பளம் என்ன தெரியுமா வேண்டும்? வீடுபேறு. ஆம். பிறவாப்பெருநிலையான முக்தியை நீ தரவேணும்" என்று மிகவும் ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறார்.

கடமைக்கு ஏற்ற உரிமை தானே கேட்க வேண்டும். இது சரியா? செய்வது வேடம், கேட்பது பெரிய பலன் இல்லையா? 

"எந்த தைரியத்தில் இப்படிக் கேட்கிறேன்? எனக்குத்தெரியும், நீ தூய பத்தரை மாற்றுத்தங்கம். நான் கேட்க வேண்டும் என்று நினைப்பதை முன்னாலேயே அறிந்து தருவாய். இந்தப் பிறவிப்பிணி தீர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உனது கருணை வேண்டும். எப்போதும் உனது சிந்தனை வேண்டும். குருமுகமாக குருந்த மரத்தடியில் வந்து நீ சொன்ன உபதேச மொழிகள் என் நெஞ்சில் இருக்க வேண்டும். நான் தூய உணர்வு, தூய அறிவு, தூய ஆனந்தம் என்பது என் நெஞ்சை விட்டு நீங்காது இருக்க வேண்டும். அதை அறிவுறுத்திக் கொண்டே நீயே என் நெஞ்சம் நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு எனக்கு ஆறு பகைவர்கள் நீங்க வேண்டும். ஐந்து கள்வர்கள் ஓடவேண்டும். என் உள்ளம் எதிர்பார்ப்பில்லாத, தூய அன்பு வடிவமாக இருக்க வேண்டும். இவற்றை நீ எனக்குத் தந்தால், நான் உன்னிடம் கேட்ட வீடுபேறு கிடைக்கும் இல்லையா?" என்கிறார்.

அதற்கு, என்னை உடையவன் நீ என்று வேறு அவருக்கு ஒரு அடைமொழி சொல்கிறார். இங்கு, மார்ஜால நியாயம் பேசுகிறார். மார்ஜாலம் என்றால் பூனை. பூனை தன் குட்டியை ஒரு குறிப்பிட்ட காலம் வரை, வாயில் கவ்விப் பாதுகாக்கும். மர்க்கட நியாயம் என்று ஒன்று உண்டு. மர்கடம் என்றால் குரங்கு. குரங்கின் குட்டி தான் அம்மாக்குரங்கைப் பிடித்துக் கொண்டு சுற்றும்.

பக்தன் முதலில் மர்கடமாக பகவானைப் பிடித்துக் கொள்கிறான். நாளடைவில், பகவான், அவனுடைய கருணையினால் மார்ஜாலமாக, பக்தனை விடாமல் பிடித்துக் கொண்டு முக்திப்பாதையில் விடுகிறார். இது தான் மார்ஜால நியாயம்.

மாணிக்கவாசகராகவே வாழ்ந்து பார்க்க, அவரது பாடல்களுக்கு, அனுக்ஷணமும், புரிதல் கூடிக்கொண்டே போவதை ஏனோ என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பெருங்கடல், திருச்சதகம், சிறுதுளி நாம் இப்போது சிந்தித்தது.

சிந்திப்போம்

வாசகம், திருவாசகம் தொடரும்

No comments:

Post a Comment

  உங்களுக்கெல்லாம் திருமூலர் தெரியுமா? தெரிஞ்சா ஆறாவது பாராலேர்ந்து மட்டும் படிங்க. தமிழ்ல மூவாயிரம் பாட்டு எழுதினவர். அவர் கதை சில பேருக்கு...