Thursday, September 21, 2023

 

ஒரு கதை சொல்றேன்.

ஒருமுறை கிருஷ்ணர் ரொம்ப சோகமா நின்னுட்டு இருந்தார். அந்த வழியா வந்த நாரதர் "என்ன கிருஷ்ணா ரொம்ப வருத்தமா இருக்கீங்க? அப்படின்னு கேட்டார்.
அதுக்கு கிருஷ்ணன் சொன்னாரு "என்னமோ போ எனக்கு ஏன்தான் இவ்வளவு சோதனையோ" அப்படின்னு சொன்னார். "அட, உங்களுக்கு சோதனையா? என்ன சொல்றீங்க? மனுஷங்களுக்கு சோதனை வந்தா உங்க கிட்ட வரலாம். உங்களுக்கே சோதனைன்னா யார்கிட்ட போறது கிருஷ்ணா" அப்படின்னு கேட்டார்.
"ஆமா நாரதா, உனக்கு சத்ரஜித் தெரியுமா?" அப்படின்னு கிருஷ்ணர் கேட்டார். நாரதர் சொன்னாரு, "தெரியுமே நீங்க கூட உங்களுக்கு கிடைத்த ஸ்யமந்தக மணியை அவர்கிட்ட கொடுத்தீங்களே! அவரும் அதை உக்ரசேன மகாராஜா கிட்ட கொடுக்காம தானே வச்சுட்டாரு. அவர் தானே?" அப்படின்னு சொன்னாரு நாரதர்.
"அவர் என்ன பண்ணிட்டாரு அந்த மணியை கொண்டு போயி அவரோட தம்பி பிரசேனண்ட கொடுத்தார். இந்த பிரசேனன் என்ன பண்ணான், அதை எடுத்துக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட போனான். போனவன் வரவே இல்லை. இங்கே சத்ரஜித் அந்த மணிக்காக நான் தான் பிரசேனனைக் கொன்னுட்டேன் அப்படின்னு ஊரு பூரா சொல்லிக்கிட்டு திரிகிறான். என்னடா இது பழியா வருது இதை எப்படி நம்ம நீக்கறதுன்னு ப்ரசேனனைத் தேடிக்கிட்டு காட்டுக்கு போனேன்." ந்னு க்ருஷ்ணர் சொன்னாரு.
"ஹ்ம்ம்ம் அப்புறம்" ந்னு நாரதரும் ஜோரா கதைக் கேக்குறார்.
"காட்டுல போய் பார்த்தா அவன் செத்து கிடக்கிறான். சரி மணி எங்கயாவது பக்கத்துல வச்சிருக்கானான்னு பார்த்தா அதையும் காணோம். அந்த இடத்துல ஒரு சிங்கத்தோட கால் தடம் பார்த்தேன். சரின்னு அந்த தடத்தோட கூட போய் பார்த்தா ஒரு சிங்கம் செத்துக் கிடந்தது. அந்த சிங்கத்துக்கு பக்கத்துல கரடியோட கால் தடம் இருக்கு. சரின்னு அதையும் தொடர்ந்து போய் பார்த்தேன். அங்க ஒரு பெண் கரடி என்ன பார்த்து 'ஓ' ந்னு கத்துறா. அதை பார்த்து ஒரு ஆண் கரடி ஓடி வந்துருச்சு." ந்னு க்ருஷ்ணர் சொன்னார்.
"அச்சச்சோ அது என்ன பண்ணினது க்ருஷ்ணா? ந்னு நாரதர் ஆர்வமா கேட்டாரு.
"அந்த கரடி ஜாம்பவான் தான். சண்டைக்கு வந்துட்டாரு" ந்னார் க்ருஷ்ணர்.
"ஓ ராம அவதாரத்துல வந்த ஜாம்பவானா?" ந்னாரு நாரதர்.
"ஆமா அப்பவே யுத்தம் முடிஞ்ச உடனே எல்லாரும் வரம் கேட்டாங்க. கொடுத்துட்டே வந்தேன். ஜாம்பவான் என்னோட சண்டை போடணும் அப்படின்னு வரம் கேட்டார். அது இப்ப கிடையாது, வேற ஒரு சமயத்துல. அப்படின்னு சொல்லிட்டேன். இப்ப அவரு சண்டைக்கு கூப்பிட்ட உடனே, சரி அவர் கேட்ட வரத்தை கொடுப்போம் அப்படின்னு 28 நாள் சண்டை போட்டோம். மல்யுத்தம். சோறு, தண்ணி கிடையாது. ஒரு வழியா அவர் புரிந்து கொண்டார். ராமாஅ வந்தவன் தான் கிருஷ்ணன் அப்படின்னு. அதுக்கப்புறம் கால்ல விழுந்தார். மன்னிப்பு கேட்டாரு. மணியை கொடுத்தார். அவர் பொண்ணையும் கல்யாணம் பண்ணி கொடுத்தாரு.
சரின்னு மணியை எடுத்துட்டு வந்து சத்திரஜித் கிட்ட கொடுத்துட்டு, உன் தம்பியை நான் கொல்லல அப்படின்னு சொல்லிட்டேன். அவனும் அந்த மணியை கொண்டு போயி ராஜா கிட்ட கொடுத்துட்டான்."
"எல்லாம் சுபம் தானே க்ருஷ்ணா? அப்புறம் என்ன யோசனை?" ந்னு நாரதர் கேட்டாரா,
"ஆனா செய்யாத தப்புக்கு பழி வந்ததே அது இந்த சதுர்த்தில நான் பார்த்த நாலாம் பிறையாலதான் நாரதா" ந்னார் க்ருஷ்ணர்.
"ஆமாம் க்ருஷ்ணா. விநாயகரை கேலி பண்ணி சிரிச்சதால சந்த்ரனை சபிச்சாரில்ல சதுர்த்தி அன்னிக்கு? ஞாபகம் வரது எனக்கும். அப்போ அவர் சொன்னார் யாராவது நாலாம் பிறையில சந்த்ரனைப் பார்த்தா வீண் பழிக்கு ஆளாவாங்கன்னு. சந்தனுக்கும் வளர்பிறை தேய்பிறை ந்னு அழகு தேய்ந்தும் கூடியும் மாறி மாறிதான் வரும்னு சொன்னாரில்ல?" என்றார் நாரதர்.
"அழகா சொன்னே நாரதா. நாலாம் பிறையை பார்க்கக்கூடாது. தெரியாம பார்த்துட்டா இந்த ஶ்யமந்தக மணியை நான் திருப்பிக்கொண்டுவந்த கதையை பக்தியோட கேட்டா அந்த சாபத்தினுடைய தாக்கம் போயிடும். இது நான் மனுஷங்களுக்கு குடுக்கற ஸ்பெஷல் வரம். போய்ச் சொல்லிடு. உங்கிட்ட இதையெல்லாம் சொன்னது எனக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. வா அப்புறம் இன்னொரு சமயம் ஜாலியா பேசுவோம்" ந்னு க்ருஷ்ணர் நாரதருக்கு கொஞ்சம் சீடை குடுத்து அனுப்பிட்டார்.
அவ்வளவுதான் கதை. ஜய ஸ்ரீக்ருஷ்ணா.
வாசித்ததற்கு நன்றி
உஷா சங்கரநாராயணன்.

No comments:

Post a Comment

  உங்களுக்கெல்லாம் திருமூலர் தெரியுமா? தெரிஞ்சா ஆறாவது பாராலேர்ந்து மட்டும் படிங்க. தமிழ்ல மூவாயிரம் பாட்டு எழுதினவர். அவர் கதை சில பேருக்கு...